Wednesday, September 8, 2010

தண்ணீர் அகதிகள்...............!

இதைவிட கொடூரம் ஏதாவது இருக்க முடியுமா? இதைவிட வக்கிரம் ஏதாவது இருக்கத்தான் முடியுமா? மனித இனம் குடிக்கத் தண்ணீர்பெறும் மிகச்சாதாரண உரிமையைக் கூட எதிர்க்கிறார்கள், மனித இனத்தின் கொடிய எதிரிகளான ஏகாதிபத்தியவாதிகள்.


கடந்த ஜூலை 28-ஆம் தேதியன்று அனைத்து மக்களும் தூய குடிநீரும் சுகாதார வசதியும் பெற வேண்டும் என்று ஐ.நா. மன்றம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. தூய குடிநீர் பெறுவதென்பது அடிப்படை மனித உரிமை என்றும், அனைத்து நாடுகளும் இம்மனித உரிமையைக் காக்க வேண்டும் என்றும் அத்தீர்மானத்தில் குறிப்பிட்டுள்ளது.

2000 மற்றும் 2005-ஆம் ஆண்டுகளில் பொலிவியாவின் மூன்றாவது பெரிய நகரமான கோச்சபம்பாவில் தண்ணீர் தனியார்மயத்தை எதிர்த்து மக்கள் மாபெரும் பேரெழுச்சியில் இறங்கினர். அப்போராட்டத்தை வழிநடத்திய “”சோசலிசத்துக்கான இயக்க” த்தின் தலைவரான இவா மொரேல்ஸ், 2005-இல் பொலிவியாவின் அதிபரானார். பொலிவிய மக்களின் ஏகாதிபத்திய எதிர்ப்புணர்வை எதிரொலிக்கும் வகையிலும், தண்ணீரை மனித இனத்தின் அடிப்படை உரிமையாக்கும் உணர்விலும் அவர் ஐ.நா.வில் இத்தீர்மானத்தைக் கொண்டு வந்துள்ளார். 192 நாடுகள் கொண்ட ஐ.நா.மன்றத்தில், பொலிவியா அதிபர் கொண்டுவந்த இத்தீர்மானத்தை ஆதரித்து இந்தியா உள்ளிட்டு 122 நாடுகளும், எதிராக 41 நாடுகளும் வாக்களித்துள்ளன. உலகின் ஏகாதிபத்திய நாடுகளும் பணக்கார நாடுகளுமான அமெரிக்கா, பிரிட்டன், கனடா, ஆஸ்திரேலியா, ஜப்பான், ஆஸ்திரியா, இஸ்ரேல், நெதர்லாந்து, டென்மார்க் முதலான நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதர நாடுகள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் நடுநிலை நாடகமாடியுள்ளன.

இத்தீர்மானத்தை நிறைவேற்றக் கூடாது என்றும், தீர்மானத்தில் திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என்று கூறி அதை நீர்த்துப்போக வைக்கவும் ஏகாதிபத்திய நாடுகளும் தண்ணீர் ஏகபோக நிறுவனங்களும் கடும் முயற்சி செய்தன. ஏனெனில், இன்று உலகின் வேகமாக வளர்ந்து வரக்கூடிய, கொள்ளை இலாபம் தரக்கூடிய தொழிலாக தண்ணீர் வியாபாரம் முன்னணிக்கு வந்துள்ளது. இதனாலேயே தண்ணீரை “நீலத் தங்கம்” என்று பன்னாட்டு ஏகபோகக் கம்பெனிகள் அழைக்கின்றன. கடந்த ஆண்டில், எண்ணெக் கம்பெனிகளின் இலாபத்தில் ஏறத்தாழ 40 சதவீதத்தை தண்ணீர் கம்பெனிகள் அடைந்துள்ளன. இந்தக் கம்பெனிகள், உலகின் தண்ணீர் ஆதாரங்களில் 5% அளவுக்கு சொந்தம் கொண்டாடுகின்றன. இதிலேயே இவ்வளவு இலாபம் என்றால், இதர நீர் ஆதாரங்களையும் அவைக் கைப்பற்றிக் கொண்டால் அவற்றின் இலாபம் எவ்வளவு மடங்கு அதிகரிக்கும் என்று சொல்லத் தேவையில்லை.

விவெண்டி, சூயஸ், பெக்டெல் முதலான உலக அளவில் தண்ணீர் வியாபாரத்தில் முதன்மையாக உள்ள பத்து நிறுவனங்கள், 150 நாடுகளில் 200 கோடி வாடிக்கையாளர்களுக்குத் தண்ணீர் விநியோகம் செய்து வருகின்றன. உலக வர்த்தகக் கழகம் தண்ணீரையும் ஒரு சரக்காகவே ஏற்றுக் கொண்டுள்ளது. எனவே தண்ணீரும் ஏற்றுமதி வியாபாரமாகிறது. ஏழை நாடுகளில் உலக வங்கியின் கடன் திட்டங்களில் பெரும்பாலானவை தண்ணீர் தனியார்மயத்தை நிபந்தனையாகக் கொண்டுள்ளன. இதன்படி, தண்ணீர், சுகாதாரம் முதலான மக்களின் அடிப்படைத் தேவைகளை அரசாங்கம் செய்து தர வேண்டியதில்லை என்பதுதான் உலக வங்கி மற்றும் உலக வர்த்தகக் கழகத்தின் விதி.

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, உலகில் நடந்த எல்லா வன்முறைப் படுகொலைகளையும் விட தண்ணீர் தொடர்பான நோகளால் இறந்துபோனவர்களின் எண்ணிக்கையே அதிகம். ஆண்டுதோறும் தூய குடிநீர் கிடைக்காமலும் சுகாதார வசதி இல்லாமலும் உலகெங்கும் ஐந்து வயதுக்கும் குறைவான 21 இலட்சம் குழந்தைகள் மாண்டு போகின்றன. மிகக் கொடிய இருபெரும் நோகளான எயிட்ஸ் மற்றும் மலேரியாவினால் கொல்லப்பட்டவர்களை விட, தூய குடிநீர் கிடைக்காமல் நோ தாக்கி மாண்டவர்களின் எண்ணிக்கை அதிகம்.

ஐ.நா.வின் கணக்கீட்டின்படி, உலகில் ஏறத்தாழ 200 கோடி மக்கள் தண்ணீர் பற்றாக்குறையால் அவதிப்படுகின்றனர். உலகின் 88 கோடியே 40 இலட்சம் மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதி இல்லை. 260 கோடி மக்களுக்குக் கழிப்பறை வசதி இல்லை. உலகின் வளரும் நாடுகளிலுள்ள ஏறத்தாழ 40 % மக்களுக்கு முற்றாக இத்தகைய வசதிகள் இல்லை. ஐ.நா. மதிப்பீட்டின்படி, 2025-ஆம் ஆண்டுக்குள் உலகில் 48 நாடுகள் குடிநீர் பற்றாக்குறையால் தவிக்க நேரிடும். ஏற்கெனவே ஆயிரக்கணக்கான கிராமங்கள் நீரின்றி மக்கள் வெளியேறும் போக்கு பல ஆப்பிரிக்க நாடுகளிலும், ஈரான், சீனா மற்றும் பாகிஸ்தானிலும் நிகழ்ந்து வருகிறது. இவர்கள் “தண்ணீர் அகதிகள்” என்று குறிப்பிடப்படுகின்றனர்.

இந்தியாவில் 1985-இல் குடிநீர் இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ள கிராமங்களின் எண்ணிக்கை 750. இது 1995-இல் 65,000 கிராமங்களாக அதிகரித்து விட்டதாக அரசாங்கமே ஒப்புக் கொள்கிறது. இந்தியாவில் பாதிக்கும் மேற்பட்ட நதிகள் மற்றும் ஏரிகளின் நீர் மாசுபட்டுள்ளது. அந்நீரைக் குடிக்கவோ குளிக்கவோ பயன்படுத்த முடியாது. நாட்டின் மூன்றில் இரு பங்கு மக்களுக்குப் போதுமான சுகாதார வசதிகள் கிடையாது. இந்தியாவில் நடந்துவரும் தண்ணீர் வியாபாரத்தின் ஓராண்டு மதிப்பு ஏறத்தாழ 10 ஆயிரம் கோடி ரூபா என்கிறது ஒரு ஆய்வு. தண்ணீர் தனியார்மயத்தை உள்நாட்டில் தீவிரமாகச் செயல்படுத்திவரும் இந்திய அரசு, உலக அரங்கில் தண்ணீர் மட்டுமின்றி, பல்வேறு மனித உரிமை விவகாரங்களில் முற்போக்கு நாடகமாடிக் கொண்டு பித்தலாட்டம் செய்து வருகிறது.

தண்ணீர் மனித இனத்தின் அடிப்படைத் தேவை. ஆனால், அந்தத் தேவை என்பது உங்களது வாங்கும் சக்தியைக் கொண்டு தீர்மானிக்கப்படுகிறது. எனவே அது விற்பனைக்கானது. மாறாக, உரிமை என்பது நீங்கள் பெற்றே ஆகவேண்டிய விசயம். அதை வியாபாரப் பொருளாக்க முடியாது. இத்தனை காலமும் வெறுமனே அடிப்படைத் தேவை என்று குறிப்பிட்டு வந்த ஐ.நா.மன்றம், இப்போது தண்ணீர் என்பது மனித இனத்தின் அடிப்படை உரிமை என்று ஏற்றுக் கொண்டுள்ளது.
தற்போது நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம், உலக நாடுகளைக் கட்டுப்படுத்தாத வெறும் காகிதத் தீர்மானம்தான். கட்டுப்படுத்தும் என்றால் இத்தனை நாடுகள் இத்தீர்மானத்தை ஆதரிக்குமா என்று உறுதியாகச் சொல்ல முடியாது. எனினும், பெயரளவிலான இத்தீர்மானத்தைக் கூட ஏகாதிபத்திய தண்ணீர் ஏகபோக நிறுவனங்கள் எதிர்த்து நின்று சதி செய்கின்றன. இது நடைமுறைக்கு வந்துவிட்டால் ஆபத்து என்று அலறுகின்றன. மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளன என்று பிற நாடுகளில் தலையீடு செயும் ஏகாதிபத்தியங்கள், மிகச் சாதாரண தண்ணீர் பெறும் உரிமையை நிலைநாட்டக் கோரும்போது, அதை நிராகரித்து எதிராக நிற்கின்றன. மனித உரிமை என்றெல்லாம் தமது ஆதிக்க நலன்களிலிருந்துதான் ஏகாதிபத்திய நாடுகள் கூச்சலிடுகின்றனவே தவிர, மக்கள் நலனிலிருந்து அல்ல.

மனித இனம் குடிக்கத் தண்ணீர்கூட கிடைக்காமல் செத்து மடிந்தாலும் பரவாயில்லை, தண்ணீர் ஏகபோக நிறுவனங்களின் கொள்ளை லாபத்துக்கும் சூறையாடலுக்கும் எவ்வித சிறு இடையூறும் நேரக்கூடாது என்பதுதான் ஏகாதிபத்தியவாதிகளின் நியாயவாதம். இதுதான் பெருமையாகப் பீற்றிக் கொள்ளப்படும் முதலாளித்துவ ஜனநாயகத்தின் மகிமை!

Sunday, August 15, 2010

அச்சுறுத்தும் "சூப்பர்-பக்'குகள்!

எந்தவொரு வீரிய மருந்துக்கும் கட்டுப்படாத "சூப்பர்-பக்' எனப்படும் பாக்டீரியா இந்திய மருத்துவமனைகளிலிருந்து உலகுக்கு பரவியதாக இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த கார்டிப் பல்கலைக்கழக ஆராய்ச்சி இதழில் வெளியான தகவல், இப்போது பரபரப்பாக செய்தியாக ஆக்கப்பட்டுள்ளது.


இந்த ஆய்விதழ் குறிப்பிடும் என்டிஎம்-1 (நியு டெல்லி மெட்டல்லோ பீட்டா லேக்டமஸ்) எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தக் கிருமி அல்லது ஒருவகை மரபீனி இ-காலி, கே-நிமோனியா ஆகிய இரு பாக்டீரியாக்களுடன் கலந்து, மனிதர்கள் உடலுக்குள் சென்று எல்லாவிதமான நோய்களையும் ஏற்படுத்தும் என்பதாலும், எந்தவிதமான தீவிர ஆன்டிபயாடிக் மருந்துகளுக்கும் இந்த "சூப்பர்-பக்' கட்டுப்படாது என்பதும்தான் அந்த ஆய்வின் முடிவு.

இந்தக் கிருமியின் பெயரில் நியு டெல்லி என்ற அடையாளம் இருக்கிறதே தவிர, இந்தக் கிருமி, தில்லி மருத்துவமனைகளிலிருந்தோ அல்லது இந்தியாவின் வேறு பகுதியிலிருந்தோ வெளியுலகுக்குச் சென்றது என்பதற்கான ஆதாரங்கள் ஏதும் கிடையாது. பாகிஸ்தான், வங்காளதேசம், இங்கிலாந்து, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, நெதர்லாந்து ஆகிய நாடுகளிலும் இந்த "சூப்பர்-பக்' தாங்கிய பாக்டீரியாக்களைக் கொண்டிருக்கும் நபர்கள் குறித்து அறிய வந்துள்ளன.

இந்த "சூப்பர்-பக்' கிருமி ஆய்வில் ஈடுபட்ட இரு ஆய்வு மாணவர்களில் ஒருவர் தமிழக ஆராய்ச்சியாளர் கே. கார்த்திகேயன். வெள்ளக்கோயிலைச் சேர்ந்த இவர் தற்போது சென்னை பல்கலைக்கழகத்தின் ஏ.எல். முதலியார் அடிப்படை மருத்துவ ஆய்வு மையத்தில் நுண்ணுயிரியல் ஆய்வு மாணவர். இங்கிலாந்து ஆய்விதழின் கருத்தை இவரே மறுத்திருக்கிறார். இந்தியாவில் மட்டும்தான் இந்த நோய்க்கிருமி உள்ளது என்று சொல்வது சரியல்ல என்றும் கூறியுள்ளார்.

ஏதோ "சூப்பர் பக்' மட்டும்தான் ஆன்டிபயாடிக் மருந்துகளுக்குக் கட்டுப்படாத கிருமி என்று கிடையாது. ஆன்டிபயாடிக் மருந்துகளுக்குக் கட்டுப்படாதவை என்று நிறைய கிருமிகள் உள்ளன. நுண்ணுயிரித் தொழில்நுட்பம் விரிந்து நுட்பமாகச் செல்வதால், புதுப்புது ஆய்வுகள் மூலம் ஆராய்ச்சியாளர்கள் இத்தகைய கிருமிகள் பற்றி கண்டறிகிறார்கள். அதற்காக பீதி கிளப்ப வேண்டியதோ அல்லது இந்தியாவின் மீது பழிசொல்வதோ தேவையில்லாத வேலைகள். குறிப்பாக ஆராய்ச்சி இதழ்களுக்குத் தேவையில்லாத வேலை.

இந்தியாவுக்கு வெளிநாடுகளிலிருந்துதான் பறவைக் காய்ச்சலும் பன்றிக்காய்ச்சலும் இறக்குமதியாகின. இதற்காக எந்த நாட்டையும் இந்தியா பழிசொல்லவில்லை. அதற்கான தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதே தவிர, இந்தியாவுக்கு வருகை தந்த எந்தவொரு வெளிநாட்டினரையும் வாட்டி வதைக்கவில்லை.
மேலும், இத்தகைய கிருமிகள் மனிதர் மூலம்தான் பரவ முடியும் என்பதில்லை என்று மறுக்கும் ஆய்வாளர்களும் இருக்கிறார்கள் என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது. இப்போது மனிதர்கள் விமானம் மூலம் சில மணி நேரத்திற்குள் உலக நாடுகள் பலவற்றுக்கும் செல்ல முடிகிறது. ஆகவே, அந்த நாட்டின் கிருமித்தொற்று இந்த நாட்டுக்குள் புகுந்ததாகச் சொல்ல முடிகிறது. ஆனால் இத்தகைய பயண வசதிகள் இல்லாத காலத்திலும் உலகின் பல்வேறு நாடுகளில் காலரா போன்ற நோய்கள் பரவலாக ஒரே நேரத்தில் ஏற்பட்டு, உலகம் முழுவதும் மக்கள் இறந்தார்கள் என்பதைக் குறிப்பிடும் சில ஆய்வாளர்கள், வான் வழியாகவும், இடம்பெயரும் பறவைகள் மூலமும் கிருமிகள் பரவிட வாய்ப்பு உள்ளது என்கிறார்கள்.

ஆகவே இந்தியாவின் மீது மட்டும், குறி வைத்து இத்தகைய குற்றச்சாட்டுகளை போகிற போக்கில் அள்ளி வீசிவிட்டுப் போவதற்குக் காரணம், இந்தியாவில் ஏற்பட்டுவரும் மருத்துவ வளர்ச்சிதான். குறிப்பாக, மருத்துவப் பயணமாக இந்தியா வருவோர் எண்ணிக்கை ஆண்டுதோறும் 30 விழுக்காடு அதிகரித்து வருகிறது.

இந்தியாவில் மருத்துவ வசதிகள் அமெரிக்கா, இங்கிலாந்து நாட்டுக்கு இணையாக உள்ளது. அதேவேளையில் மருத்துவச் செலவுகள் குறைவு. உதாரணமாக, அமெரிக்காவில் ஒரு இதய அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டுமானால், 30,000 அமெரிக்க டாலர்கள் தேவை. ஆனால் இந்தியாவில் 6,000 அமெரிக்க டாலர் (3 லட்சம் ரூபாய்) செலவில் சிகிச்சையை முடித்துக்கொண்டு நாடு திரும்ப முடியும். ஆகவே இந்தியாவுக்கு வருவோரின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது.

இந்தியாவின் பெருநகரங்களில் தற்போது புதிது புதிதாகத் தொடங்கப்படும் பல மருத்துவமனைகள் இத்தகைய வெளிநாட்டு நோயாளிகளுக்காகவே, ஐந்து நட்சத்திர ஓட்டல் தரத்துக்கு மருத்துவமனையை நிர்வகிக்கின்றன. நோயாளிகளைத் தங்கள் மருத்துவமனைக்கு அழைத்து வர, பிரசாரம் செய்ய ஏஜன்டுகளையும்கூட பல நாடுகளிலும் பயன்படுத்துகின்றன.

இந்தியாவில், வெளிநாட்டினரின் மருத்துவப் பயணத்தால் கிடைக்கும் வருவாய் 5,000 கோடி ரூபாயாக உள்ளது. 2012-ம் ஆண்டில் இந்த அளவு 2 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (சுமார் 10,000 கோடி ரூபாய்) உயரும் வாய்ப்புகள் இருக்கின்றன. இதனால் வளர்ந்த நாடுகளின் மருத்துவக்கூடங்களின் லாபம் குறைந்து விடுகிறது. அந்நாட்டு அரசுக்கும் கணிசமான வருவாய் குறைகிறது. ஆகவே, இவை வெளிநாட்டினரை அச்சுறுத்துவதற்காக வேண்டுமென்றே பரப்பப்படும் அவதூறுகள்.

இந்த அவதூறுகளுக்கு இந்தியா மறுப்பு தெரிவித்துள்ளது. ஒருபுறம் இந்தியாவின் நியாயமான வளர்ச்சியைக் கண்டு பொறாமைப்படும் அன்னிய சக்திகள். இன்னொருபுறம் நமது வளர்ச்சியைத் தங்களுக்குச் சாதகமாக்கிக் கொண்டு ஆதாயம் பெற முயலும் இடைத்தரகர்களும், அரசியல்வாதிகளும். உலகம் "சூப்பர்-பக்' பற்றி கவலைப்படுவது இருக்கட்டும். இந்தியாவை அச்சுறுத்தும் "சூப்பர் பக்'குகள் ஒன்றா, இரண்டா... நாமல்லவா பயப்பட வேண்டியிருக்கிறது!

Monday, April 5, 2010

எப்படியும் வாழ்வதா...?

வயது வந்த ஆணும் பெண்ணும் திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்வதில் தவறு இல்லை, திருமணத்துக்கு முன்பே உடல் உறவில் ஈடுபடுவதில் தவறு இல்லை என்ற கருத்தை உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி உள்பட 3 நீதிபதிகள் தெரிவித்தபோது கோடிக்கணக்கான நெஞ்சங்கள் பதறின; இதை ஜாதி, மத, மொழி வேறுபாடுகளைக் கடந்து அனைத்து சமுதாயத்தைச் சேர்ந்த பெரியவர்கள் பலரின் குமுறலிலிருந்தும் கண்டனங்களிலிருந்தும் அறிய முடிகிறது. ராமசேனை என்ற அமைப்பின் தலைவரான பிரமோத் முத்தாலிக்கின் கருத்துகளையும் செயல்களையும் நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது என்றாலும் இந்தப் பிரச்னையில் அவர் சுட்டிக்காட்டிய ஒரு விஷயம் அனைவராலும் கூர்ந்து கவனிக்கத்தக்கது.


ஒரு வீட்டில் விபசாரம் நடக்கிறது என்ற தகவல் கிடைத்து போலீஸ்காரர்கள் அவர்களைக் கைது செய்யச் சென்றால், ""வயது வந்த நாங்கள் ஒரே இடத்தில் தனித்து இருப்பதும், உடல் உறவு கொள்வதும் சட்டப்படி செல்லத்தக்கதே'' என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் கருத்துகளையே அவர்கள் திருப்பிச் சொன்னால் நடவடிக்கை எடுக்க முடியுமா?

உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் அதே அதிரடி பாணியில், ""இங்கே வந்தீர்களே எங்கள் செய்கையால் உங்களுக்கு ஏதேனும் தனிப்பட்ட பாதிப்பு ஏற்பட்டிருக்கிறதா, உங்கள் வீட்டில் யாராவது இதே போல நடந்துகொள்வார்கள் என்று நீங்கள் அஞ்சுகிறீர்களா?'' என்று கேட்டால் போலீஸ்காரர்களால் என்ன பதிலைக் கூற முடியும்?

அரசு வழக்கறிஞரைப் பார்த்து அந்த நீதிபதிகள் கேட்ட கேள்விகளை, அதே வழக்கறிஞர் மாற்றிக் கேட்டிருந்தால் நீதிபதிகளின் நிலை என்ன ஆகியிருக்கும்? உங்கள் மகனுக்கோ மகளுக்கோ வரன் பார்க்கும்போது, இப்படி திருமணத்துக்கு முன்னால் இன்னொருவருடன் சேர்ந்திருந்தால் பரவாயில்லை என்று திருமணம் செய்வீர்களா, உடலுறவு கொண்டிருந்தாலும் பரவாயில்லை என்று மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்வீர்களா என்று கேட்டிருந்தால்?

திருமணத்துக்கு முன்பே உடலுறவு கொள்ளும் இளைஞர்கள் யுவதிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்று அவ்வப்போது பத்திரிகைகளில் ""சிறப்புச் செய்திகள்'' வருவது உண்டு. இது ஏதோ சமுதாய அக்கறையில் வெளியிடப்படுவதாக யாரும் கருதிவிடக்கூடாது. இந்தக் கட்டுரைகளே, அப்படி முறைதவறி நடக்க அஞ்சும் இளைய தலைமுறையை மனதளவில் தயார்படுத்த, பன்னாட்டுத் தொழில் நிறுவனங்கள் பணம் கொடுத்து எழுத வைக்கும் வியாபார உத்தி என்கிறார்கள் சமூகவியல் ஆய்வாளர்கள்.

கருத்தடை மாத்திரைகள், ஆண் உறை, பெண் உறை போன்ற சாதனங்கள் இவற்றின் விற்பனை மூலம் கோடிக்கணக்கான ரூபாய் சம்பாதிக்கும் பன்னாட்டுத் தொழில் நிறுவனங்கள் இந்தியாவில் கடைவிரித்து இதற்காகவே செயல்படுகின்றன என்பது அப்பாவிகளான நம் நாட்டு மக்கள் அறியாத அப்பட்டமான உண்மை. தங்களுடைய ""தொழிலுக்கு'' உற்ற களத்தை பன்னாட்டு நிறுவனங்கள் தயார் செய்யத்தான் இந்தச் செய்திகளும் கட்டுரைகளும். சிவப்பழகி, கண் அழகி, கால் அழகி என்ற அழகிப் போட்டிகள் எல்லாம்கூட இந்த வியாபார உத்தியின் பிரிக்க முடியாத அங்கமே.

ஆங்கில வார இதழ்களிலும் மாநில மொழி வாரப் பத்திரிகைகளிலும் முறை வைத்துக் கொண்டு இப்படி அந்தரங்க விஷயங்களை ஏதோ அறிவியல்பூர்வமாக ஆய்ந்து எழுதுவதாக எழுத்து விபசாரம் செய்து இளைய தலைமுறையின் எதிர்காலத்தை மட்டுமல்ல, பாரதத் திருநாட்டின் வருங்காலத்தையும், தலைமுறை தலைமுறையாக நாம் கடைப்பிடித்து வந்த உயரிய பண்புகளையும் தகர்த்தெறியத் தலைப்படுகிறார்கள்.

கருத்தடை மாத்திரைகள், மோகத்தை அதிகப்படுத்தும் வீரிய சக்தி மாத்திரைகள், (லேகியங்கள்), உள்ளாடைகள், மாதவிடாய்க்கால சானிடரி நாப்கின்கள் போன்றவற்றின் விளம்பரங்களுக்காக மட்டும் ஆண்டுதோறும் கோடிக்கணக்கான ரூபாய்கள் செலவாகின்றன. வரவோ அவற்றைப் போல பல மடங்கு.

சொல்ல நா கூசுகிறது என்றாலும் தனியார் தொலைக்காட்சிகளின் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் இரவு நேர சிறப்புக் காட்சிகளும் இந்தத் தொழிலுக்கு வளம் சேர்க்கத்தான் என்பதே உண்மை. மனித குலத்தின் மிகப் பழமையான தொழில் என்று ஏளனமாகக் குறிப்பிடப்படும் வேசைத்தனமே இன்று காட்சி ஊடகங்களில் அப்பட்டமாக வெளிப்பட்டு நிற்கிறது. இந்த நிலையில் நீதிபதிகளின் கருத்து நெஞ்சங்களில் தீயை வைத்துவிட்டது என்றால் மிகையில்லை. உச்ச நீதிமன்றத்தில் சில ஆண்டுகளுக்கு முன்னால் தரப்பட்ட ஒரு தீர்ப்பும் இதே போல சிந்தனையாளர்களின் கோபத்துக்கு ஆளானது. ஆனால் அந்தத் தீர்ப்பு இன்றுவரை திருத்தப்படவே இல்லை என்பதே உண்மை.

அதாவது தில்லியில் சுற்றுச் சூழலை மாசுபடுத்தி கரும்புகையைக் கக்கும் சில தொழில் நிறுவனங்கள் மேட்டுக்குடிகளின் இல்லங்கள் இருந்த பகுதியில் அமைந்திருந்தன. அதாவது தொழிற்சாலைகளுக்கு அருகில் வீடுகளைக் கட்டிக்கொண்டு மேட்டுக்குடிகள்தான் பின்னாளில் குடியேறினார்கள். ஆனால் அவர்கள் தங்களுடைய செல்வாக்கு காரணமாக, காற்றில் மாசு அதிகரித்துவிட்டதால் அந்த ஆலைகளை வேறு இடத்துக்குக் கொண்டு போய் நிறுவ வேண்டும் என்று வழக்குத் தொடுக்க வைத்து அதில் வெற்றியும் பெற்றார்கள்.

அந்தத் தீர்ப்பு வந்தபோது சிந்தனையாளர்கள் எழுப்பிய கேள்விகள் மூன்று. இந்த ஆலைகளிலிருந்து இந்த அளவுக்கு நச்சுப்புகை வந்தால் நகரின் எந்தப் பகுதியில் இருந்தாலும் அது மக்களைப் பாதிக்குமே, நச்சுத்தன்மையைக் குறைக்க வேண்டும் அல்லது உற்பத்தியையே கைவிட வேண்டும் என்று ஏன் உத்தரவிடவில்லை? தில்லி மாநகரின் மற்றொரு பகுதிக்கு ஆலைகளை மாற்றச் சொல்லி உத்தரவிடுகிறீர்களே அங்கு வசிக்கும் ஏழைகளின் உயிர் என்ன விலை மலிவானதா?

ஆலையால் பாதிக்கப்படும் மக்கள் ஒரு பக்கம் கிடக்கட்டும், இங்கேயே மூன்று ஷிப்டுகளிலும் வேலை பார்க்கின்றனரே நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் அவர்களுடைய உடல் நலம் என்ன ஆகும், அவர்களைக் காப்பாற்ற ஏதாவது உத்தரவில் கூறியிருக்கிறீர்களா என்று. இந்தக் கேள்விகளுக்கு இன்று வரை பதில் இல்லை.

கற்பாம், மானமாம்... என்று ஏளனம் செய்யும் நவநாகரிக யுகத்தில், சேர்ந்து வாழ்தல் தவறல்ல என்று கருத்துக் கூறியிருக்கிறது நீதித்துறை. நீதியாம், நியாயமாம்... என்று மனம் நொந்து முணுமுணுப்பதல்லாமல் நமக்கு வேறு வழியேது...? பன்னாட்டு நிறுவனங்களின் ஆக்டோபஸ் வியாபாரப்பிடி மேலும் மேலும் இறுகுவதன் இன்னொரு அடையாளம்தான் இந்தத் தீர்ப்பு என்கிற குற்றச்சாட்டில் அர்த்தமே இல்லை என்று ஒதுக்கித் தள்ளிவிட முடியவில்லை... எப்படியும் வாழலாம் என்கிற நிலைமை ஏற்பட்டால் அதன் முதல் பலி நீதித்துறையாகத்தான் இருக்கும் என்பதை நமது நீதிபதிகள் நினைவில் கொள்ள வேண்டும்!

Wednesday, January 27, 2010

கணினியில் தமிழில் தட்டச்சு செய்வது?

NHM Writer வைத்து எவ்வாறு கணினியில் தமிழில் தட்டச்சு செய்வது? என்பதை இக்கட்டுரையில் பார்ப்போம்.
மேலும் Google Chrome, Firefox, Safari, Internet Explorer, Opera, என பல விதமான பிரவுஸர்களில் எளிதாக தட்டச்சு செய்ய உதவி புரிகின்றது.

இவை மட்டும் அல்லாமல் Window Live Writer, Outlook, Notepad, MS-Word, MS-Excel, MS-Powerpoint என MS-Office மென்பொருள்களுடன் சேர்ந்து எளிதாக வேலை செய்கின்றது.

வின்டோஸ் XP/2003 மற்றும் Vista ஆப்ரேடிங் சிஸ்டம்மில் இந்த மென்பொருளை நிறுவ முடியும்.

தமிழ் தட்டச்சு தெரிந்தவர்கள்/தெரியாதவர்கள் கூட NHM Writer மென்பொருள் மூலம் எளிதாக தட்டச்சு செய்ய முடியும்.

ஆங்கிலத்தில் amma என்று தட்டச்சு செய்தால் அதை திரையில் அம்மா என்று தமிழில் பார்க்கும் வசதி.

ஒன்றுக்கும் மேற்பட்ட தமிழ் தட்டச்சு விசைப்பலகை பயன்படுத்த முடியும்.

இந்த மென்பொருளை நிறுவ வின்டோஸ் XP/2003 மற்றும் Vista ஆப்ரேடிங் சிஸ்டம் CD தேவையில்லை.

NHM Writer எவ்வாறு டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்வது எப்படி?
NHM Writer என்ற மென்பொருளை கீழ் உள்ள இணையத்தளத்தில் இருந்து டவுன்லோட் செய்யவும்.

http://software.nhm.in/products/writer


எவ்வாறு டவுன்லோட் செய்வது திரை விளக்கப்படம்.

http://kmdfaizal.blogspot.com/2008/10/nhmwriter.html

Monday, January 25, 2010

போலி மருந்துகளும்,போதை மருந்துகளும்!

கடந்த இரண்டு மாதமாக இந்தியாவின் பல பாகங்களில்,குறிப்பாகப் பெருநகரங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில் பல மருந்துக் கடைகளில் போலி மருந்துகளும்,போதை மருந்துகளும் விற்கப்படும் அதிர்ச்சி தரும் தகவல் வெளியாகி இருக்கிறது.போதாக்குறைக்கு,பல மருந்துக் கடைகளில் காலாவதியான மருந்துகள் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்குத் திருப்பித் தரப்படுவதற்குப் பதிலாக ஏமாளி வாடிக்கையாளர்களின் தலையில் கட்டப்படுவதும் தெரிய வந்திருக்கிறது.
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் நடத்தப்பட்ட அதிரடிச் சோதனைகளில் ரூ.2 லட்சத்துக்கும் அதிகமான போலி மருந்துகள் கைப்பற்றப்பட்டிருக்கின்றன.2000-க்கும் அதிகமான வழக்குகள் மருந்துக்கடை அதிபர்கள்மீது தொடரப்பட்டுள்ளன.

1940-ல் பிரிட்டிஷார் காலத்தில் பிறப்பிக்கப்பட்ட மருந்து மற்றும் அழகுச் சாதனங்கள் சட்டம் எந்த அளவுக்கு இந்தப் போக்கைக் கட்டுப்படுத்த உதவியிருக்கிறது என்பது சந்தேகம்தான்.அந்தச் சட்டப்படி குற்றவாளிகளுக்கு அபராதம் விதிப்பதுடன் அவர்களது மருந்து விற்பனை செய்யும் உரிமம் பறிக்கப்படவும் செய்யலாம்,அவ்வளவே.

போலி மருந்துகள் விற்கப்படுவதைத் தடுப்பதற்காக எல்லா மாநிலங்களிலும் தனியாக ஒரு பிரிவு மக்கள் நல்வாழ்வுத் துறையில் இருந்தாலும்,அந்தப் பிரிவு போதிய ஆள்பலம் இல்லாத,தேவையான அதிகாரம் இல்லாத ஒரு பிரிவாகத்தான் செயல்படுகிறது.தமிழகத்தையே எடுத்துக் கொண்டால் இந்தப் பிரிவுக்காக ஒதுக்கப்பட்டுள்ள 70 அதிகாரிகளில் 40 மருந்துக் கண்காணிப்பாளர்கள்தான் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.ஏறத்தாழ 30 இடங்கள் கடந்த மாதம் வரை நிரப்பப்படாமல் இருந்தன.

சென்னையில் மட்டும் 400-க்கும் அதிகமான மருந்துக் கடைகள் இருக்கின்றன.ஆனால் மருந்துக் கண்காணிப்பாளர்கள் வெறும் 12 பேர் தான்.இவர்களுக்கு ஜீப்போ,தேவையான பணியாளர்கள் பலமோ உண்டா என்றால் அதுவும் இல்லை.இதே நிலைதான்,இந்தியா முழுவதும்!
கடந்த 20 ஆண்டுகளில் இந்தியா மருத்துவத் துறையில் மிகப்பெரிய முன்னேற்றத்தை அடைந்திருக்கிறது என்பதில் மாறுபட்ட கருத்தில்லைதான்.ஆனால் அந்த முன்னேற்றம் மருந்து தயாரிப்பு நிறுவனங்களுக்கும்,மருத்துவக் காப்பீட்டு நிறுவனங்களுக்கும்,மருத்துவமனைகளுக்கும் பயன்படும் அளவுக்குச் சாதாரண பொதுமக்களுக்குப் பயன்படுகிறதா என்று கேட்டால் சந்தேகம்தான்.
இந்தியாவில் மருந்து தயாரிப்புத் துறையின் ஓராண்டு விற்றுமுதல் சுமார் ரூ.85,000 கோடி.அதில்,சுமார் ரூ.35,000 கோடி மதிப்புள்ள மருந்துகள் ஏற்றுமதியாகின்றன.இந்த ஏற்றுமதியில் போலி மருந்துகளும் இருந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை.
ஏற்கெனவே சீனா,இந்தியாவில் தயாரித்தவை என்கிற முத்திரையுடன் உலகச் சந்தையில் போலி மருந்துகளை விநியோகித்து இந்தியாவின் ஏற்றுமதியைத் தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் செய்திகள் வெளிவந்துள்ளன.
இந்த நிலையில் இந்தியாவிலேயே போலி மருந்துகள் அதிக அளவில் தயாரிக்கப்படுவதாகச் செய்திகள் வரும்போது உலக அரங்கில் இந்தியாவில் தயாராகும் மருந்துகளின் தரம் கேள்விக்குறியாகி நமது ஏற்றுமதி கணிசமாகப் பாதிக்கப்படலாம்.

இந்தியச் சந்தையில் விற்கப்படும் மருந்துகளில் 3 விழுக்காடு மருந்துகள் போலியானவை என்கிறது உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வு.போலி மருந்துகள் தயாரிப்பு மற்றும் விற்பனை பற்றித் தகவல் அளித்தால்,கைப்பற்றப்படும் போலி மருந்துகளின் தொகையில் 20 சதவிகிதம் அல்லது ரூ.25 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என்கிற மத்திய சுகாதாரத் துறையின் அறிவிப்பு எந்த அளவுக்குப் பயனளிக்கிறது என்பது தெரியவில்லை.போதுமான கண்காணிப்பாளர்களும்,அவர்களுக்குத் தேவையான வசதிகளும்,ஆள்பலமும் இல்லாமல் இதுபோன்ற அறிவிப்புகளால் என்ன பயன் இருக்க முடியும்?
மருந்து மற்றும் அழகுப் பொருள்கள் சட்டம் திருத்தப்பட்டு,குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனை வழங்கப்பட்டால் மட்டும்தான் போலி மருந்துகளையும் போதை மருந்து விநியோகத்தையும் தடுக்க முடியும் என்பது ஆட்சியாளர்களுக்குத் தெரியாதா என்ன?மக்கள் விழிப்புணர்வு பெறாத வரையில் ஆட்சியாளர்கள் கண்துடைப்புச் சட்டங்களைப் போட்டுத் தப்பித்துக் கொள்வார்கள்!