Thursday, May 5, 2011

தீவிரவாதத்தை ஒழித்த பயங்கரவாதி!

கொல்லப்பட்டார் ஒசாமா பின்லேடன்!
அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் அந்த அறிவிப்பு வெளியானபோது, நள்ளிரவு என்றும் பாராமல் வீதிகளில் கூடி, ஆடித் தீர்த்தார்கள் அமெரிக்கர்கள். கொண்டாட்டங்கள் தொடர்கின்றன. நிச்சயம் இது நல்ல செய்திதான், அமெரிக்காவுக்கு மட்டும் அல்ல... உலகுக்கே!
கிட்டத்தட்ட 10 ஆண்டுகள், இரு பெரும் போர்கள், பல்லாயிரக்கணக்கான உயிர்கள், லட்சக்கணக்கான கோடிகளைப் பலியிட்டு, ஒசாமாவை அழித்தே விட்டது அமெரிக்கா. ஆனால், ஒசாமா எப்படி உருவானார்?
'ஒசாமா பின் முஹம்மது பின் அவாத் பின்லேடன்’- இதுதான் ஒசாமாவின் முழுப் பெயர். பிறந்த இடம் ரியாத், சவுதி அரேபியா. பிறந்த நாள் மார்ச் 10, 1957. ஒசாமாவின் தந்தை முஹம்மது பின் அவாத் பின்லேடன் பெரும் பணக்காரர். சவுதி அரச குடும்பத் தோடு மிக நெருக்கமான உறவுவைத்து இருந்த முஹம்மது பின் அவாத் பின்லேடனுக்கு, ஏராளமான மனைவிகள். அவர்களில் 10-வது மனைவியான ஹமிதாவுக்கு ஒசாமா பிறந்தார். தந்தையின் 54 பிள்ளைகளில் 17-வது பிள்ளை ஒசாமா!
செல்வச் செழிப்பான சூழலில் பிறந்து வளர்ந்தாலும், ஒசாமாவின் இளம் பருவம், உறவுகள் சார்ந்து சந்தோஷமாக இல்லை. காரணம், ஒசாமா பிறந்த சில காலத்திலேயே அவருடைய பெற்றோர் பிரிந்தனர். பிறகு, அல் அத்தாஸ் என்பவரை மணந்தார் ஹமீதா. அவர்களுக்குப் பிறந்த ஐந்து குழந்தைகளோடு, மாற்றாந் தகப்பன் சூழலிலேயே வளர்ந்தார் ஒசாமா. சின்ன வயதிலேயே மதத்தின் மீது அவருக்குப் பெரிய ஈடுபாடு ஏற்பட இதுவும் ஒரு காரணம்.
கல்லூரி நாட்களில் ஒசாமாவுக்குப் பொருளாதாரம் மீது பெரிய நாட்டம் இருந்தது. பொருளாதாரமும் மேலாண்மைக் கல்வியும் அவர் கற்றதாகச் சொல்லப் படுவது உண்டு. பின்னாட்களில், ஒசாமா சிவில் இன்ஜினீயரிங்கும், மக்கள் நிர்வாகமும் படித்ததாகச் சொல்லப்படுவதும் உண்டு. ஒசாமாவின் 17-வது வயதில் அவருக்கு முதல் திருமணம் நடந்தது. முதல் மனைவியின் பெயர் நஜ்வா. பிறகு, ஒசாமா மேலும் நால்வரை மணந்தார். மொத்தம் அவருக்கு 25 பிள்ளைகள் இருப்பதாகச் சொல் கிறார்கள்!
ஒசாமாவை ஆயுத அரசியலை நோக்கியும் மத அடிப்படைவாத அமைப்பியலை நோக்கியும் தள்ளியது, ஆஃப்கன் மீதான சோவியத் ஒன்றியத்தின் தாக்குதல். அப்துல்லா அஸாமுடன் சேர்ந்து 'மஹ்தப் அல் கதாமத்’ அமைப்பில் செயல்படத் தொடங்கினார் ஒசாமா. தொடக்கத்தில், பெஷாவரில் இருந்தவாறு ஆஃப்கன் போருக்கான நிதியைக் குவித்துத் தருவதிலும் ஆயுதங்களை வாங்கித் தருவதிலும் ஒசாமா ஈடுபட்டு இருந்தார். சோவியத் ஒன்றியத்துக்கு எதிராக இதே அமெரிக்கா அந்த நாட்களில் ஒசாமாவுக்குப் பணம் கொடுத்தது. ஒரு கட்டத்தில் 'மஹ்தப் அல் கதாமத்’ அமைப்பில் இருந்து பிரிந்தார். இன்னும் தீவிரமான ராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்ற எண்ணத்தில் அப்போது அவர் உருவாக் கியதுதான் 'அல்-கொய்தா’!
தொடக்கத்தில் அல்-கொய்தாவின்நோக்கம், சுதந்திர ஆஃப்கனை உருவாக்குவதாகவே இருந்தது. 1989-ல் சோவியத் படைகள் ஆஃப்கனில் இருந்து வெளியேறியதும், ஒசாமா அரேபியா திரும்பினார். சிறிது காலம் அல் -கொய்தா அடங்கி இருந்தது. குவைத் படை எடுப்பைக் காரணம் காட்டி, இராக் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல், அரபு உலகம் அமெரிக்கா வசமாகிவிடும் என்பதை ஒசாமாவுக்கு உணர்த்தியது. 'எதுவாக இருந்தாலும், நமக்குள் பேசிக்கொள்ளலாம். முஸ்லிம்கள் அல்லாதோருக்கு உதவ வேண்டாம்!’ என்று அரபு நாடுகளுக்கு வேண்டுகோள் விடுத்தார் ஒசாமா. இதற்காக சவுதி மன்னரையும் சந்தித்தார். ஆனால், யாரும் பொருட்படுத்தவில்லை. இதைத் தொடர்ந்து, அமெரிக்காவுக்கு எதிரான நடவடிக்கைகளில் நேரடியாக இறங்கியது அல்-கொய்தா.
1990-களிலேயே அமெரிக்கப் புலனாய்வு அமைப்பான 'எஃப்.பி.ஐ.’ அல்-கொய்தாவைக் கட்டம் கட்ட ஆரம்பித்துவிட்டது. சதித் திட்டங்கள் பின்னணியில் பலர் பிடிபட்டனர். 1993-ல் உலக வர்த்தக மையத்தில் நடந்த குண்டுவெடிப்புக்குப் பின் அமெரிக்கா அல்-கொய்தாவைப் பின்தொடர ஆரம்பித்தது.
ஒரு கட்டத்தில் சவுதிக்கு எதிராக வெளிப்படையாகவே செயல்படத் தொடங்கினார் ஒசாமா. இதன் தொடர்ச்சியாக ஏற்பட்ட நிர்பந்தம் காரணமாக 1992-ல் ஏமனுக்குச் சென்றார். அங்கே இருந்து அரபு நாடுகளில் செயல்படும் எல்லாத் தீவிரவாத அமைப்புகளுடனும் அவர் கை கோக்க, தொடர்ந்து சூடான், எகிப்து, லிபியா எனப் பல்வேறு நாடுகளாலும் தேடப்படும் நபராக 1996-ல் ஆஃப்கனின் ஜலாலாபாத்துக்கு வந்தார் ஒசாமா. முல்லா உமருடன் கை கோத்தார்.
தாலிபன்கள் ஆண்ட-முல்லா உமர் காலத்திய ஆஃப்கன்தான், ஒசாமாவின் கனவு தேசம். மக்களைக் கற்காலத்துக்குத் திரும்ப அழைத்துச் சென்ற அந்த ஆஃப்கன்தான், 'உலகின் ஒரே இஸ்லாமிய நாடாகச் செயல்படு கிறது!’ என்று ஒசாமா சொன்னார்.
மெரிக்காவில் 2001 அல்- கொய்தா நடத்திய இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்குப் பிறகு, உலகம் முழுவதும் தேடப்படும் நபர் ஆனார் ஒசாமா. உலகெங்கும் 'ஜிஹாதி’ என்ற சொல் பிரபலமானது. கடவு ளின் பெயரால் யாரை வேண்டுமானாலும் கொல்லலாம்; எவ்வளவு பயங்கரங்களை வேண்டுமானாலும் அரங்கேற்றலாம் என்று முடிவெடுத்தவர்களுக்கு எல்லாம் முன்னோடி ஒசாமாதான். அவரது தலைக்கு 25 மில்லியன் டாலர் பரிசுத்தொகை அறிவித்தது அமெரிக்கா. 2007-ல் இந்தத் தொகை 50 மில்லியன் டாலராக உயர்த்தப்பட்டது. 30 ஆயிரம் அமெரிக்க வீரர்கள் ஒசாமாவைத் தேடும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் தேடல் வேட்டை, பாகிஸ்தானின் அப்போடாபாத்தில் நடந்த இறுதித் தாக்குதலில் வெறும் 40 நிமிடங்களில் முடிவுக்கு வந்தது!
ஆயுதக் குழுக்கள் மூலம் அரசுகளைத் தகர்க்கலாம் என்பதுதான் ஒசாமாவின் நம்பிக்கையாக இருந்தது. ஆனால், உலகின் எந்த ஒரு பகுதியிலும் நியாயமான காரணங்களுக்காகக்கூட ஆயுதக் குழுக்கள் செயல்பட முடியாத நிலையை உருவாக்கியதுதான், ஒசாமாவின் ஒரே 'சாதனை’! ஒசாமாவின் இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்குப் பிறகு, உலகின் வெளியுறவுக் கொள்கை முற்றிலும் மாறியது. உலகில் தனி ஒரு நாடே இல்லை என்று சொல்லும் அளவுக்கு எல்லா அரசுகளும் கை கோத்தன. ஆயுதக் குழுக்களை அழிப்பதில் ஒன்றிணைந்தன. பல தேசியப் போராட்டங்கள் அழித்தொழிக்கப்பட்டன, ஈழப் போராட்டம் உட்பட!
''அமெரிக்கா எல்லா நாடுகளையும் ஆக்கிரமித்துக்கொள்ள நினைக்கிறது. எல்லா நாடுகளின் வளங்களையும் கொள்ளையடிக்க நினைக்கிறது. அதன் முகவர்கள்தான் நம்மை ஆள வேண்டும் என்று நினைக்கிறது. இதற்கு நாம் எல்லோரும் சம்மதிக்க வேண்டும்என்று நினைக்கிறது. எதிர்ப்பவர்களைப் பயங் கரவாதிகள் என்கிறது. யார் பயங்கரவாதி... அமெரிக்காவா? அமெரிக்காவின் இத்தகைய பயங்கரவாதத்தை எதிர்ப் பவர்களா?''
- ஒரு தொலைக்காட்சிப் பேட்டியின்போது, தன் மீதான பயங்கரவாதக் குற்றச்சாட்டுகளுக்கு ஒசாமா பின்லேடன் அளித்த பதில் இது.
''அமெரிக்கா எதைச் செய்ய நினைக்கிறதோ, அதைச் செய்து முடிக்கும். உலகத்துக்கு நாம் மீண்டும் சொல்லும் செய்தி இதுதான்!''
- ஒசாமா கொல்லப்பட்டதை அறிவித்தபோது, ஒசாமாவின் மரணத் தைப்பற்றி அமெரிக்க அதிபர் ஒபாமா குறிப்பிட்டது இது.
அமெரிக்கா எதை எல்லாம் செய்ய நினைக்கிறதோ, அதை எல்லாம் செய்து முடித்துவிடுவதால்தான், ஒசாமாக்கள் உருவாகிறார்கள் என்பதை அமெரிக்க அதிபர்களுக்கு யார் சொல்வது?




Wednesday, April 20, 2011

செய்வீர்களா?வருங்கால முதல்வருக்கு ஒரு திறந்த மடல் :ஆர்.நடராஜன்

ஐயா, அம்மணி, உங்களில் யாரோ முதல்வராக வரப்போகிறீர்கள். உங்களுக்கும் இப்போது அது சஸ்பென்ஸ். உங்கள் உறக்கத்தைக் கெடுத்துள்ள ஓட்டுப் பெட்டிகள் உறக்கத்தில் இருக்கின்றன. அவை எழுந்ததும், நீங்கள் யார் என்பது எங்களுக்கு தெரிந்துவிடும். மக்கள் எஜமானர்கள், நீங்கள் வேலைக்காரர்கள் என்கிறீர்களே... அது உண்மை, எங்கள் காதில் சுற்றிய பூ இல்லை என்பதை நம்பி, நாங்கள் எழுதும் திறந்த மடல் இது.

உங்கள் எதிர்பார்ப்புகள் இருக்கட்டும், எங்கள் எதிர்பார்ப்புகளை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டாமா, அதற்காகவே இந்த கடிதம்.நீங்கள் பதவியேற்கும் முன்பே ஆரவாரம் தொடங்கும்; ஆடம்பரம் தொடரும். அதை நினைத்தால் பயமாக இருக்கிறது. ஐயாவே, அம்மணியே, நீங்கள் இப்போதே உங்கள் தொண்டர் படைக்குச் சொல்லி வைத்துவிட்டால், ஆரவாரமில்லாமல், உங்கள் வெற்றியை கொண்டாடலாம். அமைதிக்கு கவுரவம் உண்டு என்பதை புரிந்து கொள்ளுங்கள். உங்களை மட்டும் குறை சொல்லக்கூடாது... நாங்களே வெறும் கைதட்டிக் கூட்டம்... காக்காய் பிடிக்கும் கும்பல். புண்ணாக்கு சங்கம், பருத்திக்கொட்டை சங்கம், குதிரைக் குஞ்சு சங்கம், கோழிக்குட்டி சங்கம் என்று பல சங்கங்கள் வைத்திருக்கிறோம். இதுதான் எங்கள் சங்க காலம். ஒவ்வொரு சங்கமும் பத்திரிகைகளில், "போற்றி, போற்றி' என்று போட்டி போட்டு உங்களை புகழ்ந்து விளம்பரங்கள் வெளியிடும்.அப்படி செய்யாதீர்கள் என்று நூற்றுக்கணக்கான சங்க நிர்வாகிகளை வேண்டிக்கொள்வீர்களா? நீங்கள் தீர்மானித்து விட்டால், இந்த விளம்பரங்கள் வராது. இப்படிப்பட்ட விழாக்களில் கலந்துகொண்டு நானும் உங்களைப் போல் கலப்பைக்காரன், கரண்டிக்காரி, சட்டிக்காரன், முட்டைக்காரி என்று சொல்வதைத் தவிர்ப்பீர்களா?

நீங்கள் இந்த மாதிரி சில குழுக்களுக்காக மட்டுமல்ல, எல்லாருக்குமே முதல்வர் என்பதை முழுமையாக புரிந்து கொள்வீர்களா? உங்களுக்கு வாக்களிக்காதவர்களுக்கும் நீங்களே முதல்வர்; சரிதானே.இந்த புதிய ஆட்சிக் காலத்தில் நீங்களோ, உங்கள் அமைச்சர் பெருமகன்களோ, பெருமாட்டிகளோ செல்லும் வழி நெடுக, கட்-அவுட்கள், படத்தட்டிகள், கொடிகள் வைப்பதைத் தடுப்பீர்களா? எந்த ஆரவாரமும் எவருக்கும் கவுரவம் சேர்ப்பதில்லை என்பதை கட்சித் தலைவர், கட்சித் தலைவி என்ற முறையில் புரிந்து கொள்வீர்களா?அரசுத் திட்டங்களின் அறிமுகமா? புதிய திட்டத்திற்கு அடிக்கல் நாட்டுவதா? பாலமோ, கழிப்பறையோ திறப்பதா? அங்கெல்லாம் முதல்வர் தன் பரிவாரத்துடன் சென்று விழா நடத்தும் சடங்குகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பீர்களா? விழாக்கள் மூலம் கிடைக்கும் விளம்பரம் வேறு வழிகளிலும் கிடைக்கும்; அதை நாடுங்களேன்.மறுபடியும் நீங்கள் ஆட்சிக்கு வர இருக்கும் நேரத்தில், உங்கள் தேர்தல் அறிக்கை, இலவசங்கள், சலுகைகள், மானியங்கள் பற்றி எதுவும் சொல்லாமல், இருக்கும் அளவுக்கு அடித்தட்டு மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த வேண்டுமே. அவர்கள் என்றென்றும் கையேந்திகளாக இருந்தால் நீங்கள் அடிக்கடி சொல்லிக் கொள்ளும் சுயமரியாதைக் கொள்கைக்கு அது பொருத்தமாக இல்லையே. அதை உடனடியாக செய்துவிட முடியாது. ஆனால், ஆடம்பரங்களைக் குறைத்துக் கொண்டால், உருப்படியான திட்டங்களுக்கு பணம் செலவிடப்படலாம். இனி, இலவசங்கள் தேவைப்படாது என்ற நிலை உருவாக்கப் பாடுபடுவீர்களா?மக்களுக்கு கிரைண்டர், மிக்சி, பேன் தரும்போது, இதை முதலமைச்சராக உள்ள நான் தரவில்லை. அரசாங்கம் மூலம் இதை நீங்கள் இவற்றைப் பெறுவதற்குக் காரணம், வரி செலுத்தும் உங்கள் சகோதரர்களே என்ற உண்மையை பகிரங்கமாக சொல்லி, உங்கள் சுயமோகத்தை விரட்டிவிட்டு சகோதரத்துவத்தை வளர்ப்பீர்களா?கட்சிக்காரர்களை கட்சி அலுவலகத்துடன் நிறுத்திவிட்டு, கோட்டை பக்கம் வரவிடாமல் தடுப்பீர்களா?

கோட்டையில் அதிகாரிகளும், அமைச்சர்களும் பொது நலன்களுக்காக அல்லாத உரிய வேலைகளுக்காக வரும் மக்களே தென்பட வேண்டும், கரை வேட்டிகள் அல்ல. இதற்கான கறாரான ஏற்பாடுகளை செய்வீர்களா?காவல்துறையை ஏவல் துறையாக மாற்றாமல் இருப்பீர்களா?உங்கள் பி.ஏ.,க்கள், அமைச்சர்களின் பி.ஏ.,க் கள் ஒவ்வொருவரும் ஒரு குட்டி சமஸ்தானமாக மாறிவிடாமல் இருக்க, அவர்களைக் கண்காணிப்பீர்களா? நீங்கள் சரியாக இருந்தால் அவர்களும் சரியாக இருப்பார்கள் அல்லவா?அறைக்கு வெளியே இரு பக்கங்களிலும் பெரிய, மிகப்பெரிய "டிவி' அளவுக்கு இரண்டு கம்ப்யூட்டர் மானிட்டர்கள் பொருத்தி, ஒன்றில் உங்களை அறையில் சந்திக்க வருகிறவர்கள் யார் என்ற தகவலையும், மறு திரையில் உங்கள் வசம் முடிவுக்காக காத்திருக்கும் கோப்புகள் எவை என்பதையும் தெரிவிப்பீர்களா? அதுதானே ஒளிவு மறைவு இல்லாத நிர்வாகம். செய்வீர்களா?உங்கள் அமைச்சர்கள் ஒவ்வொருவரும் இதைச் செய்ய வேண்டும் என்று கட்டாயப்படுத்துவீர்களா?அலுவலகத்தில் இருக்கும்போது, அலுவலக வேலையை மட்டுமே பாருங்கள்; வீட்டில் நீங்கள் குடிமக்கள் என்ற தினசரி நடைமுறையை வகுத்துக் கொள்ளுங்கள்; அதை அப்படியே செய்துவிட முடியாது. மாநிலத்தில் எங்காவது நெருக்கடி என்றால், நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏனென்றால், நீங்கள் எங்களது, 24 மணி நேர ஊழியர். அப்படி ஊழியம் செய்ய கூப்பிட்ட குரலுக்கு முக்கிய அதிகாரிகள் வரவேண்டும். அவர்கள் வரட்டும், அருகில் இருக்கட்டும். மற்றபடி கட்சிக்காரர்களை கட்சி அலுவலகத்துடன் நிறுத்திக் கொள்ளலாமே... செய்வீர்களா?

ஆட்சியிலும், கட்சியிலும் ஆடம்பரத்தையும், ஆரவாரத்தையும் அறவே ஒழிப்பீர்களா? பதவியேற்று மூன்று அல்லது ஆறு மாதம் கடந்த பிறகு வளர்ந்த நாடுகளுக்கு சென்று வாருங்கள். அங்கே அரசு சட்ட திட்டங்கள்படி நடைபெறுகிறதா, கட்-அவுட்களின்படி நடந்து வருகிறதா என்று பார்த்து வாருங்கள். அந்த ஒழுங்கு முறையை சாலைகளிலும், அரசு அலுவலகங்களிலும் கொண்டு வாருங்கள். அதுதான் முன்னேற்றத்தின் முதல்படி. உங்கள் வெளிநாட்டுப் பயணங்கள் வேறு காரணங்களுக்காக அமைய வேண்டாம். கமிஷன் என்றால், கமிஷனும் வரும். புரிகிறதா? மக்களுக்கு இப்போது அதிக விவரம் தெரிந்து விட்டது.வீட்டில் இல்லாத ஒழுக்கம் வீதியில் வராது. வீதியில் இல்லாத ஒழுக்கம் சமூகத்தில் வராது. சமூகத்தில் இல்லாத ஒழுக்கம் அரசாங்கத்தில் வராது. இப்போது சீர்திருத்தத்தை உங்களிடமிருந்துதான் தொடங்க வேண்டும். வருங்கால முதல்வரே, நீங்கள் யாராக இருந்தாலும் சரி... மக்கள் இனி புதிய தொடக்கத்தை எதிர்பார்க்கலாமா? எங்களால் ஏற முடியவில்லை; முடங்கிப் போய்விட்டோம். நீங்கள் இறங்கி வருவீர்களா, எங்களை ஏற்றிவிட?


ஆர்.நடராஜன், அமெரிக்க தூதரக முன்னாள் அரசியல் ஆலோசகர்

Saturday, March 19, 2011

விலைபோகும் ஜனநாயகம்!

கடந்த இரு நாள்களாக இந்தியா முழுவதிலும் பேசப்படுகின்ற பேச்சாகவும், நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் ஸ்தம்பிக்க வைத்த விவகாரமாகவும் மாறியிருக்கிறது - ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு 2008-ம் ஆண்டு ஜூலை மாதம் நம்பிக்கையில்லா தீர்மானத்தில் வெற்றிபெற பிற கட்சி உறுப்பினர்களுக்குக் கோடிகோடியாய் பணத்தைக் கொட்டித் தீர்த்த விவகாரம்.

நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்ட அந்த நாளின்போதும்கூட, தங்களுக்குப் பணம் கொடுக்க முயன்றார்கள் என்று பாஜக உறுப்பினர்கள் சிலர் பணக் கட்டுகளை அவையில் எடுத்துக் காட்டி, அந்த செய்தி நாடு முழுவதும் ஒளிபரப்பானபோது, மத்திய அரசு அதை மறுத்தது.

ஆனால் தற்போது விக்கிலீக் வெளியிட்டுள்ள ஆவணங்களில் இந்த உண்மைகள் அப்பட்டமாக வெளியாகியுள்ளன. காங்கிரஸின் முக்கிய பிரமுகரான சதீஷ் சர்மா என்பவர், நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கவிருந்த 4 நாள்களுக்கு முன்பாக, எம்பி-க்களுக்குக் கொடுப்பதற்காக ரூ.50 கோடி முதல் 60 கோடி வரை பணத்தை வைத்திருப்பதைத் தமக்குக் காட்டியதாக அமெரிக்கத் தூதரக அலுவலர் ஒருவர் அமெரிக்க அரசுக்கு ஜூலை 17-ம் தேதி ரகசிய மின்னஞ்சலை அனுப்பியுள்ளார். இதனை விக்கிலீக் அம்பலப்படுத்தியுள்ளது. இச்செய்தி இந்தியப் பத்திரிகைகளிலும் வெளியாகியுள்ளது.

இதற்கு தார்மீகப் பொறுப்பேற்றுப் பிரதமர் பதவி விலக வேண்டும் என்று நாடாளுமன்ற இரு அவைகளிலும் எதிர்க்கட்சியினர் கோரிக்கை வைத்து, அமளியில் ஈடுபட்டபோது, இதில் பிரதமர் அளித்துள்ள விளக்கம் - இதுவரை அளித்துள்ள தன்னிலை விளக்கங்களையெல்லாம் விஞ்சக்கூடியதாக இருக்கிறது. ""இந்திய மக்களால் விவாதிக்கப்பட்டு, அலசப்பட்டு, தள்ளுபடி செய்யப்பட்ட பழைய விஷயங்களுக்கு எதிர்க்கட்சியினர் அங்கீகாரம் அளித்து, உயிர் கொடுக்க நினைக்கிறார்கள்'' என்று கூறியுள்ளார் பிரதமர்.

அதெப்படி அவரால் இந்த விவகாரம் மக்களால் தள்ளுபடி செய்யப்பட்டவை என்று தீர்மானிக்க முடிகிறது. இதை தீர்மானிக்க அவருக்கு உதவியாக இருக்கிறது ஒரு புள்ளிவிவரம். நம்பிக்கையில்லா தீர்மானத்தை தோல்வியுறச் செய்த காங்கிரஸýக்கு அடுத்து வந்த 2009 மக்களவைத் தேர்தலில் 141 இடத்திலிருந்து 206 இடங்கள் அதிகமாக அளித்து, அரசின் மீது மக்கள் மன்றம் நம்பிக்கை தெரிவித்திருக்கிறதாம். ஆனால், நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்த பாஜகவுக்கு 138 இடங்களிலிருந்து 116 இடமாகக் குறைந்தது. கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு 59 இடங்களிலிருந்து 39 ஆகக் குறைந்துவிட்டது என்கிறார்.

அதாவது தேர்தலில் எதிர்க்கட்சியினர் பல இடங்களில் தோற்றுவிட்டால், மக்கள் இவர்களது செயலை அங்கீகரித்துவிட்டார்கள் என்று அர்த்தமா? அடுத்தத் தேர்தலில் 206 இடங்களுக்கும் கூடுதலாக சில இடங்கள் பெற்றுவிட்டால், ஸ்பெக்ட்ரம் ஊழலை மக்கள் ஏற்றுக்கொண்டுவிட்டார்கள் என்று சொல்லிவிடலாமா? எதற்கு எதை அளவுகோலாக வைப்பது?

இந்தத் தகவல் அமெரிக்க நாட்டுக்கும் அமெரிக்கத் தூதுவர் அலுவலகத்துக்கும் இடையிலான ரகசிய கடிதப் போக்குவரத்து. இதை யாரும் உறுதிப்படுத்த மாட்டார்கள் என்கிற தைரியத்தில் பிரதமர் இத்தகைய வாதத்தை முன்வைக்கின்றார். இதை பாஜக, இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் நன்கு அறியும். அதனால்தான், இப்பதவியில் நீடிக்க தார்மீக உரிமை இல்லை என்றே சொல்கிறார்கள்.

நம்பிக்கை வாக்கெடுப்பில் மத்திய அரசு தோற்றுப் போகுமெனில், அதனால் மத்தியில் ஆளும் காங்கிரஸ் கட்சியைப் பொருத்தவரை மற்றொரு தேர்தலை சந்திக்க வேண்டும்; அதில் வெற்றி பெறலாம் அல்லது தோல்வியுற்று எதிர்க்கட்சியாக இருக்கலாம் என்பதைத் தவிர, பெரிய இழப்பு ஏதுமில்லை. ஆனால் பதவியின் மோகம், அதிகார போதை எப்படியும் இந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் வெற்றி பெற்று, தன்னை நிலைநிறுத்திக்கொள்ள முயலும்போது, அந்த பேராசையின் முன்னால் எல்லா நீதி, நியாயங்களும் உடைந்து போகின்றனவே...

நரசிம்ம ராவ் ஆட்சிக் காலத்தில் இவ்வாறு பணம் கொடுத்து நாடாளுமன்றத்தில் மற்ற கட்சி உறுப்பினர்களை விலைக்கு வாங்குவதில் காங்கிரஸýக்கு முன்அனுபவம் உண்டு. இது ஒன்றும் புதியதல்ல.

அமெரிக்கத் தூதரகம் இந்தியாவில் நடைபெறும் ஒவ்வொரு நிகழ்வையும் உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருப்பது வழக்கம். அதிலும் குறிப்பாக, அமெரிக்காவுடன் அணுசக்தி ஒப்பந்தம் கூடாது என்பதை வலியுறுத்தி, கம்யூனிஸ்ட் கட்சிகள் தங்கள் ஆதரவை விலக்கிக் கொண்டதால்தான் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர வேண்டிய நிலைமை ஏற்பட்டது. தனது பெரும்பான்மை ஆதரவு பலத்தை நிரூபிக்க வேண்டிய அவசியம் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு ஏற்பட்டது. இதைக் கருத்தில் கொண்டு பார்த்தால், அமெரிக்கா எந்த அளவுக்கு இந்த விவகாரத்தை மிகவும் நுட்பமாகக் கண்காணித்திருக்கும் என்பதை எவரும் உணர முடியும். அணுசக்தி ஒப்பந்தம் கைகூடாமல் போனால் அதனால் இழப்பும் கௌரவக் குறைச்சலும் அமெரிக்க அரசுக்குத்தான்.

யார் கண்டது, இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் நிறைவேற எதிர்க்கட்சி உறுப்பினர்களை விலைக்கு வாங்கக் காங்கிரஸýக்கு உதவியது அமெரிக்க உளவுத்துறையாகக்கூட இருந்திருக்கக்கூடும். இல்லையென்றால், அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்துகொண்டிருந்த அமர்சிங்கின் உதவியுடன் சமாஜ்வாதி கட்சியின் ஆதரவைக் காங்கிரஸ் எப்படிப் பெற்றது என்று பத்திரிகையாளர்கள் எழுப்பிய சந்தேகத்துக்கு காங்கிரஸ் பதில் அளித்ததாகத் தெரியவில்லையே ஏன்?

மத்திய அரசோ அல்லது காங்கிரஸ் நிர்வாகிகளோ இத்தகைய சட்டவிரோதச் செயலைச் செய்யவில்லை என்று ஆணித்தரமாகச் சொல்கிறார் பிரதமர் மன்மோகன் சிங். அப்படியானால், அமெரிக்க அரசு தனது நலனுக்காக இந்தியாவில் ஆட்சி கவிழாமல் காப்பாற்ற பணத்தை வாரி இறைத்தது என்கிறாரா? இதற்கு வேறு என்னதான் பொருள்?