Friday, September 11, 2009

சென்னையை ஆக்கிரமிக்கும் பிச்சைக்காரர்கள்

எம். மார்க் நெல்சன் from Dinamani

சென்னை, செப்.10: சென்னையை அழகுபடுத்துகிறோம் என்ற பெயரில் தமிழக அரசும், சென்னை மாநகராட்சியும் பல கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை நிறைவேற்றி வருகின்றன.

ஆனால், மாநிலத்தின் மற்ற பகுதிகளில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் சென்னைக்குப் படை எடுக்கும் பிச்சைக்காரர்கள், தமிழக அரசின் முயற்சிக்கு எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தி வருகின்றனர். இவர்களால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.

பகல் நேரங்களில் கோயில்கள், போக்குவரத்து சிக்னல்கள் என மக்கள் நெருக்கம் அதிகம் உள்ள பகுதிகளில் கூட்டம் கூட்டமாக பிச்சை எடுத்து இடையூறு ஏற்படுத்தும் இவர்கள், இரவில் சாலையோர நடைபாதைகளையும், பஸ் நிழற் குடைகளையும் இருப்பிடமாக பயன்படுத்தி வந்தனர். இப்போது மின்சார ரயில் நிலையங்களையும் ஆக்கிரமிக்கத் தொடங்கியுள்ளனர்.

இவர்களில் வயதானவர்களும், மன நலம் பாதிக்கப்பட்டவர்களும் மின்சார ரயில் நிலைய நடை மேடைகளை நாள் முழுவதும் ஆக்கிரமித்திருப்பதால், அங்கு அமைக்கப்பட்டிருக்கும் இருக்கைகளை பயணிகள் பயன்படுத்த முடியாத நிலை உருவாகியுள்ளது. மேலும் அங்கேயே உணவு உண்பது, மலஜலம் கழிப்பது என பெரும் சுகாதாரச் சீர்கேட்டை ஏற்படுத்தி வருகின்றனர்.

எழும்பூர், வியாசர்பாடி, திருமுல்லைவாயில், அம்பத்தூர், ஆவடி, திருநின்றவூர் என எந்தவொரு மின்சார ரயில் நிலையத்தையும் இவர்கள் விட்டுவைக்கவில்லை.

சீரழியும் சேத்துப்பட்டு ரயில் நிலையம்:

இதில் பிச்சைக்காரர்களின் முழுமையான ஆக்கிரமிப்புக்கு ஆளாகியிருப்பது, பராமரிப்பின்றி கைவிடப்பட்டிருக்கும் சேத்துப்பட்டு ரயில் நிலையம்தான். இந்த ரயில் நிலையத்தை ஒட்டி, ரயில்வேக்கு சொந்தமான இடம் உள்ளது. இந்த இடத்தை ஆந்திரத்திலிருந்து தஞ்சம் புகுந்திருக்கும் 200-க்கும் மேற்பட்ட பிச்சைக்காரர்கள் ஆக்கிரமித்துள்ளனர்.

பகல் நேரங்களிலும், மழைக் காலங்களிலும் இவர்கள் அனைவரும் ரயில் நிலைய நடைமேடைகளை ஆக்கிரமித்து விடுகின்றனர். இதனால் நடைமேடைகள் அனைத்தும் குப்பைக்கூளங்களுடன் சுகாதார கேட்டுடன் காட்சி அளிக்கின்றன.

குடிநீர் வசதியும், கழிவறை வசதியும் இல்லாத இந்த ரயில் நிலையத்தை பராமரிப்பதற்கு ஆட்களும் கிடையாது, அதிகாரிகளும் கிடையாது. பயணிகளின் பாதுகாப்புக்கு என்ற பெயரில் ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸôர் ஒரு சிலர் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். ஆனால், இவர்களின் பணி ஒரு மணி நேரம் மட்டுமே. ""நடைமேடைகளை ஆக்கிரமித்திருக்கும் பிச்சைக்காரர்களை விரட்டும் பணி எங்களுடையது அல்ல. அதற்கு அதிகாரமும் இல்லை. ரயில்வே போலீஸôர்தான் அதைச் செய்ய வேண்டும்'' என்கின்றனர் அவர்கள்.

இந்த நிலையில், இரவில் இவர்களின் தொல்லை தாங்க முடியவில்லை என ரயில் நிலையத்துக்கு அருகில் உள்ள ஜெகந்நாதபுரம் பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். இரவில் மது அருந்திவிட்டு உரத்த குரலில் சண்டையிடுகின்றனர். இதனால் தூக்கம் கெடுகிறது. பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர். பலமுறை போலீஸில் புகார் அளித்தும் பயனில்லை என்கின்றனர்.

பயனற்றுப்போன மறுவாழ்வு இல்லம்: பிச்சைக்காரர்களின் மறு வாழ்வுக்கென சென்னை மேல்பாக்கத்தில் அரசு சார்பில் இல்லம் நடத்தப்படுகிறது. தமிழ்நாடு அரசு ஊனமுற்றோர் மாநில ஆணையத்தின் கீழ் இது செயல்படுகிறது.

இந்த ஆணையத்தின் அதிகாரிகளால் போலீஸôர் உதவியுடன் கைது செய்யப்படும் பிச்சைக்காரர்கள் தண்டனைக் காலம் முடியும் வரை இந்த இல்லத்தில் தங்க வைக்கப்பட்டு, மறுவாழ்வு அளிக்கப்படுகிறது.

தையல், தோட்டக்கலை, மர வேலை, மண் பாண்டங்கள் தயாரித்தல் உள்ளிட்ட பல்வேறு தொழில் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. எலும்பு இல்லாத கறிச் சாப்பாடு உள்ளிட்ட ராஜ உபசாரம் அளிக்கப்படுகிறது. இதற்காக ஒவ்வொரு ஆண்டும் இந்த இல்லத்துக்கு பல லட்சம் ரூபாய் ஒதுக்கப்படுகிறது. மருத்துவர், நிர்வாக அதிகாரி, கண்காணிப்பாளர், சமையல் கலைஞர் என 10-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இந்த இல்லத்தில் பணியாற்றி வருகின்றனர்.

அதிகாரிகளின் அலட்சியப்போக்கு:1954-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த இல்லம், 950 பேர் வரை தங்கி மறுவாழ்வு பெறும் வசதி கொண்டது. இதனடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் 950 பேருக்கு மறுவாழ்வு அளிக்க இலக்கு நிர்ணயிக்கப்படும்.

ஆனால் அதிகாரிகளின் அலட்சியப்போக்கால் இங்கு கொண்டுவரப்பட்டவர்களின் எண்ணிக்கை 100-ஐ தாண்டியதில்லை. இந்த ஆண்டுதான் 181-ஐத் தொட்டுள்ளது. ஆனால், நிதி ஒதுக்கீடு ஒவ்வொரு ஆண்டும் அதிகரிக்கப்பட்டே வருகிறது.

2005-06-ம் ஆண்டில் ரூ. 32.52 லட்சமும், 2006-07-ம் ஆண்டில் 38.24 லட்சமும், 2007-08-ம் ஆண்டில் 45.26 லட்சமும், 2008-09-ம் ஆண்டில் 54.68 லட்சமும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 2009-10-ம் ஆண்டில் ரூ. 72.37 லட்சம் ஒதுக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பிச்சைக்காரர்கள் சென்னையைத் தொடர்ந்து வலம் வந்துகொண்டிருக்கும் நிலையில், இந்த இல்லமும், அதற்கு ஒதுக்கப்படும் நிதியும் எதற்கு என்பதே பொது மக்களின் கேள்வியாக உள்ளது.

வெளிநாடுகளிலிருந்தும் வெளி மாநிலங்களிலிருந்தும் வரும் சுற்றுலாப் பயணிகள் காலாற நடக்க முயன்றால் அவர்களைச் சூழ்ந்துகொண்டு நச்சரித்து அவர்களை விரட்டியடிப்பது பிச்சைக்காரர்கள்தான்.

பிச்சைத் தொழிலில் நல்ல வருமானம் கிடைப்பதாலேயே குழந்தைகளைக் கடத்தி ஊனப்படுத்தி பிச்சையில் ஈடுபடுத்தும் ""தாதா'' கும்பல்களும் செயல்படுகின்றன. இது ஒரு சமூகத்தீமை, இதைத் தடுத்தே தீர வேண்டும் என்ற உறுதி அதிகாரிகளிடத்தில் இல்லாவிட்டால் இது தொடர்கதையாகத்தான் இருக்கும்.

No comments: