Wednesday, September 16, 2009

குணம்நாடிக் குற்றமும் நாடி...!

இல. கணேசன்
ஜஸ்வந்த் சிங்கை புத்தகம் எழுதியதற்காக பாரதிய ஜனதா கட்சி நீக்கிவிட்டது என்பதாகச் சிலர் நீட்டி முழக்கி எதிர்ப்புத் தெரிவிக்க முனைந்து வருகிறார்கள். ஜஸ்வந்த் சிங், கட்சியிலிருந்து நீக்கப்பட்டது ஜின்னாவைப் புகழ்ந்தார் என்பதற்காக மட்டுமல்ல; வல்லபாய் படேல் குறித்து தவறாக எழுதிவிட்டார் என்பதற்காகத்தான்.
யார் இந்த வல்லபாய் படேல்?

ஆங்கிலேயன்தான் இந்த நாட்டை அரசியல் ரீதியாக ஒன்றுபடுத்திவிட்டான் என்று அறியாமையில் சிலர் பேசித் திரிகிறார்கள். ஆனால் உண்மை என்ன? ஆங்கிலேயன் பாரதத்துக்கு சுதந்திரம் தருவதற்கு முன் அது குறித்து லண்டனில் உள்ள பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினான்.

அப்போது பாரத நாடு, ஆங்கிலேயனது நேரடி ஆளுகைக்கு உள்பட்ட பகுதி என்றும் மன்னர்கள் ஆட்சிக்கு உள்பட்டு ஆனால், ஆங்கிலேயனின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் பகுதி என்றும் இரு பகுதிகளாக நிர்வாக ரீதியில் செயல்பட்டன.

தன்னுடைய நேரடி ஆதிக்கத்தில் இருக்கின்ற "பிரிட்டிஷ் இந்தியா' பகுதிக்குச் சுதந்திரம் வழங்குவதாகவும், சமஸ்தானங்களைப் பொருத்தவரை அவை விரும்பினால் இந்திய யூனியனில் இணையலாம் அல்லது அவை விரும்பினால் பாகிஸ்தானோடு இணையலாம் அல்லது அவை விரும்பினால் சுதந்திரமாகவே நீடிக்கலாம் என்றும் தீர்மானம் நிறைவேற்றியவன்தான் ஆங்கிலேயன்.

அவனது கற்பனை, தான் போன பிறகு பாரதம் சிதறுண்டு போக வேண்டும் என்பதுதான். ஆனால், இறைவன் அருளால் நாட்டின் முதல் உள்துறை அமைச்சராக வல்லபாய் படேல் பொறுப்பேற்றுக் கொண்ட காரணத்தால் 600 க்கும் மேற்பட்ட சமஸ்தானங்கள், இந்திய யூனியனில் இணைந்தன - மூன்றைத் தவிர. ஒன்று ஜுனாகட், இரண்டு ஹைதராபாத், மூன்று ஜம்மு - காஷ்மீர். இதில் ஜுனாகட்டையும் ஹைதராபாதையும் பாரதத்துடன் இணைக்கும் பொறுப்பை படேல் ஏற்றுக்கொண்டார். அதன் காரணமாக அவை பாரதத்துடன் இணைந்தன.

ஜம்மு - காஷ்மீரை பாரதத்துடன் இணைக்கும் பொறுப்பை ஜவாஹர்லால் நேரு ஏற்றுக் கொண்டார். இன்னும் அது தடுமாற்றமாகவே இருக்கிறது.

கலாசார ரீதியாக பன்னெடுங்காலமாக பாரதம் ஒரே நாடாக இருந்தாலும்கூட அரசியல் ரீதியாக இந்த நாட்டை ஒற்றுமைப்படுத்திய பெருமை எவரையேனும் சேருமானால் அது வல்லபாய் படேலைத்தான் சேரும்.

அதுமட்டுமல்ல, பாரதம் மீது படையெடுத்து சோமநாதபுரம் ஆலயத்தைத் தகர்த்து கொள்ளையடித்துச் சென்ற அந்தக் கறையைப் போக்குவதற்காக சபதம் ஏற்றவர் படேல். அதன்படி மீண்டும் அதே இடத்தில் பிரம்மாண்டமான சோமநாதபுரம் ஆலயத்தை நிர்மாணித்து அதை நிறைவேற்றியும் காட்டினார்.

இந்த இரண்டு காரணங்களுக்காக, நாட்டின் வரலாறு தெரிந்த தேசபக்தர்கள் வல்லபாய் படேலைப் போற்றுகிறார்கள்.

எந்தவொரு மனிதனிடமும் நற்குணங்களும் தீய குணங்களும் கலந்தே இருக்கும். ஆனால், அவனது வாழ்க்கையில் எது மிகுதியாக வெளிப்படுகிறதோ அதுவே அவனது அடையாளமாகக் கருதப்படும்.

குணம்நாடி குற்றமும் நாடி அவற்றுள் மிகைநாடும் மரபே இந்நாட்டின் மரபு.

அதன் காரணமாகவே சிலரது பெயரைச் சொன்ன மாத்திரத்திலேயே மக்களுக்கு அவரிடம் எத்தகைய பண்பு கூடுதலாக இருக்கிறதோ அல்லது இருந்ததோ அதுவே நினைவுக்கு வரும்.

கர்ணன் என்றால் கொடை நினைவுக்கு வரும். ராமன் என்றால் அறம் நினைவுக்கு வரும். சகுனி என்றால் சூது நினைவுக்கு வரும், மகாத்மா என்றால் அஹிம்சை நினைவுக்கு வரும்.

இதேபோல வல்லபாய் படேல் என்று சொன்னமாத்திரத்தில் நாட்டை ஒற்றுமைப்படுத்தியவர் என்பதே நினைவுக்கு வரும்.

ஜின்னா என்று சொன்னமாத்திரத்தில் இந்த நாட்டின் பிரிவினைக்கு வித்திட்டவர் என்பதே நினைவுக்கு வரும்.

ஜஸ்வந்த் சிங், படேல் குறித்து, தவறாக எழுதிவிட்டார் என்பதற்காக எந்தவித விசாரணையும் இல்லாமல் அவரை நீக்கலாமா? என்று ஜஸ்வந்த் சிங்கின் திடீர் ஆதரவாளர்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.

ஒரு கற்பனைக்காக, ஜஸ்வந்த் சிங் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்படாமல் இருந்திருக்குமானால் என்ன ஆகியிருக்கும்?

புத்தகம் வெளியிட்ட 24 மணிநேரத்துக்குள், "நாமெல்லாம் தெய்வமாகப் போற்றக்கூடிய வல்லபாய் படேல் குறித்து பாரதிய ஜனதாவைச் சேர்ந்த ஒருவர் அவதூறாக எழுதிவிட்டார்' என்று குஜராத் மக்களிடையே காங்கிரஸ் கட்சி பிரசாரம் மேற்கொண்டிருக்கும். அதோடு மக்களின் உணர்வுகளைப் பாரதிய ஜனதாவுக்கு எதிராகத் தூண்டிவிட்டு, கலவரத்தை உண்டாக்கி, அதன் காரணமாக சட்டம் ஒழுங்குப் பிரச்னை ஏற்பட்டிருக்குமானால் அது எத்தகைய விபரீதத்தில் முடிந்திருக்கும் என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும்.

ஆனால், படேலை தெய்வமாகப் போற்றுகிற குஜராத் மக்கள், இப்போது மோடியின் நற்செயலுக்காக அவர் பின்னால் அணிவகுத்து நிற்கிறார்கள்.
அப்படியானால் மோடியைக் காப்பாற்றவா ஜஸ்வந்த் சிங்கை பலியாக்கினார்கள் என்ற கேள்வி ஏழலாம்.

பாரதிய ஜனதாவில் எந்த ஒரு முடிவும் எந்த ஒரு தனி நபரும் எடுப்பதில்லை. தலைவராக இருந்தாலும், ஒரு குழு கூடித்தான் எந்த ஒரு விஷயம் குறித்தும் முடிவு செய்கிறது.

ஜஸ்வந்த் சிங் குறித்து கட்சித் தலைமை இதுவரை பகிரங்கமாக எதுவும் சொல்லாமல் இருந்திருக்கலாம். அநேகமாக சொல்லவும் மாட்டார்கள். கட்சிக்குள் இருந்தவர் குறித்து, அவரை கட்சியைவிட்டு வெளியேற்றிய பிறகு களங்கம் விளைவிக்கும் விதமாகப் பேசுவது என்பது மல்லாந்து படுத்துக்கொண்டு எச்சில் துப்புவது போன்றது. பாரதிய ஜனதா இதை ஒருபோதும் செய்யாது. செய்ததில்லை.

ஆனால், இந்த அரசியல் நாகரிகத்தையே பலவீனமாகக் கருதி, கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டவர்கள் அன்றாடம் வீசிவரும் அக்னி ஏவுகணைகள், இதுநாள் வரை வெறும் வாயை மென்று கொண்டிருந்த பலருக்கு, அவல் கிடைத்தது போன்ற மகிழ்ச்சியைத் தந்துள்ளது.

ஜஸ்வந்த் சிங் சொல்லும் குற்றச்சாட்டுகள் அனைத்தையும் பார்க்கும்போது, கட்சியில் நான்காம் இடத்தில் இருந்த ஒருவரை கட்சித் தலைமை நீக்கியிருப்பதன் மூலம் ஏதோ நியாயமான ஒன்றுக்கும் மேற்பட்ட காரணங்கள் இருந்திருக்க வேண்டும் என்பதில் பாரதிய ஜனதா தொண்டர்கள் உறுதியாக உள்ளார்கள். அதிலும் அந்த நபர் வெளியே வந்தபிறகு பேசும் பேச்சுகளைக் கேட்ட பிறகு, இந்த நபரை இத்தனை நாள் எப்படி வைத்திருந்தார்கள் என்ற எண்ணம்தான் எல்லோருக்கும் ஏற்படுகிறது.

பாரத நாட்டின் சிறுபான்மை மதத்தைச் சேர்ந்தவர்கள் அச்சமின்றி வழிபாட்டு உரிமையோடு வாழ்ந்து வருகிறார்கள். பாரத நாட்டின் எந்தவொரு குடிமகனுக்கும் இருக்கும் உரிமை ஒரு இஸ்லாமியனுக்கும் இருக்கிறது; ஒரு கிறிஸ்தவனுக்கும் இருக்கிறது.

பக்கத்தில் இருக்கிற பாகிஸ்தானிலோ அல்லது வேறுசில அரபு நாடுகளிலோ இத்தகைய உரிமையை எதிர்பார்க்க முடியுமா?

இந்திய நாட்டு முஸ்லிம், பாகிஸ்தானில் உள்ள முஸ்லிம்களைவிட அதிக சுதந்திரத்துடன்தான் வாழ்ந்து வருகிறான். சொல்லப்போனால், இந்த தேசத்துப் பெரும்பான்மை இந்துக்களுக்கு இல்லாத உரிமைகளெல்லாம் சிறுபான்மை மதத்தவருக்கு உள்ளது என்பதுதான் பிரச்னையே.

அத்வானி பாகிஸ்தானுக்கு விஜயம் செய்தபோது, அவர்கள் நாட்டு மரபுப்படி பாகிஸ்தானின் தந்தையாகக் கருதப்படுகின்ற ஜின்னாவின் நினைவிடத்துக்கு அழைத்துச் சென்றார்கள். அத்வானியும் சென்றார். அங்கிருந்த பதிவுக் குறிப்பேட்டில், விருந்தினரான அத்வானி, தனது கருத்துகளைப் பதிவு செய்யும்படி அவர்கள் கேட்டுக் கொண்டதால் பதிவு செய்தார்.
பாகிஸ்தானை உருவாக்கிய ஜின்னா, "நான் உருவாக்குகிற பாகிஸ்தானில் இந்துக்கள் ஆலயங்களுக்குச் செல்லலாம். இஸ்லாமியர்கள் தொழுகைக்குச் செல்லலாம். சீக்கியர்கள் குருத்வாராக்களுக்குச் செல்லலாம். அவரவர் மதத்தை அவரவர் பின்பற்றுவதற்கு எவ்விதத் தடையும் இருக்காது' என்று குறிப்பிட்டிருக்கிறார். இதன் மூலம் பாகிஸ்தான் ஒரு மதச்சார்பற்ற நாடாக இருப்பதையே ஜின்னா விரும்பினார் எனத் தெரிகிறது' என்றுதான் பதிவு செய்திருக்கிறார்.

"ஜின்னாவை மதச்சார்பற்றவர் என்று அத்வானி கூறினார்' என்று கூறுவதற்கு இதில் எங்கே இடமிருக்கிறது. எனவே அத்வானி, ஜின்னாவைப் புகழ்ந்தார் என்று கூறுவது உண்மையல்ல. மாறாக, மத வேறுபாடு இல்லாமல் பாகிஸ்தான் இருக்க வேண்டும் என்று ஜின்னாவே சொல்லியிருந்தும் பாகிஸ்தான் மதச்சார்பு உள்ள நாடாக இருக்கிறதே என்று பாகிஸ்தானுக்கு உணர்த்தியிருக்கிறார்.

இதே கருத்தைத்தான் மறுநாள், பாகிஸ்தானில் வேறொரு கூட்டத்திலும் பேசியிருக்கிறார். ஆனால் துரதிருஷ்டவசமாக அத்வானி, ஜின்னாவை மதச்சார்பற்றவர் எனப் புகழ்ந்துவிட்டார் என ஊடகங்கள் ஊதிப் பெரிதாக்கிச் செய்தி வெளியிட, உண்மை என்னவென்று தெரியாமல் பலர் கண்டனங்கள் தெரிவிக்க அதன்பிறகு நடந்த சம்பவங்களை நாடே அறியும்.

ஏனைய அரசியல் கட்சியில் இருந்து பாரதிய ஜனதா வேறுபட்டு, நல்ல தன்மை உள்ளவர்கள் தலைவர்களாகவும் தொண்டர்களாகவும் இருப்பதை நடுநிலையாளர்களேகூட ஒப்புக்கொள்வார்கள். இதற்குக் காரணமே ஆர்.எஸ்.எஸ்.ஸின் அடித்தளம்தான்.

காங்கிரஸ் கட்சிக்கு ஒரு காலத்தில் மகாத்மா காந்தி எப்படியோ, தி.மு.க.வுக்கு ஈ.வெ.ரா. எப்படியோ அதுபோலத்தான் பாரதிய ஜனதாவுக்கு ஆர்.எஸ்.எஸ். இயக்கம். ஆர்.எஸ்.எஸ்.ஸின் வழிகாட்டுதல், பாரதிய ஜனதாவுக்கு எப்போதும் பெருமை தரும்; உயர்வையும் தரும்.

சிறுபான்மை சமூகத்தினர் மத்தியில் பாரதிய ஜனதா குறித்து திட்டமிட்ட ரீதியில் ஏனைய அரசியல் கட்சிகள் செய்கின்ற தவறான பிரசாரத்தை சிலர் நம்பிவிடுகிறார்கள்.
இந்நிலையில் பாரதிய ஜனதாவின் உண்மைத் தன்மை என்னவென்று அவர்கள் புரியாமல் இருக்கிறார்கள்.

வாஜ்பாயின் ஆட்சிக்காலத்தில் சிறுபான்மையினருக்கு எதிராக எதுவும் நடந்துவிடவில்லை. மாறாக, அவர்கள் சமமாகவே நடத்தப்பட்டார்கள்.

அமைப்பு ரீதியில் அத்வானி தொடர்ந்து நீடிப்பாரா, இல்லையா என்று சிலர் தாங்களாகவே கேள்வியையும் எழுப்பி, பதிலையும் சொல்லிக் கொள்கிறார்கள். அத்வானி எந்தப் பொறுப்பில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவர்தான் பாரதிய ஜனதாவின் வழிகாட்டி.

பாரதிய ஜனதா ஆட்சி புரிகிற மாநிலங்களில் குறிப்பாக குஜராத்தில் மக்கள் நலத் திட்டங்கள் ஏராளமாகச் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
இதன் காரணமாக ஏனைய மாநிலங்களைவிட தனிமனித வருமானம் அம்மாநிலத்தில் கூடியிருக்கிறது. மத வேறுபாடு இல்லாமல் எல்லோரது பசியையும் போக்க வேண்டும்; எல்லோரையும் வளம் பெறச் செய்ய வேண்டும் என்பதற்கேற்பவே பாரதிய ஜனதாவின் ஆட்சி பல்வேறு மாநிலங்களில் நடைபெற்று வருகிறது.

பாரதிய ஜனதா மக்கள் முன்வைக்கும் வாதம் மதவாதம் அல்ல. அது தேசிய வாதம். சிலர் இதை வகுப்பு வாதம் என்று முத்திரை குத்தப் பார்க்கிறார்கள்.
காலத்தோடு பொருந்த வேண்டும் என்பதற்காக தங்களது கொள்கைகளை மாற்றிக் கொண்டவர்கள் காணாமல் போய்விட்டார்கள் என்பதுதான் சரித்திரம் நமக்குக் கற்பித்திருக்கும் உண்மை. மாறாக, எந்த லட்சியத்துக்காக அரசியல் களத்திற்குள் நுழைந்தோமோ, அந்த லட்சியத்தில் இருந்து மாறாமல், அந்த லட்சியத்தை நோக்கி மக்களை ஈர்த்து, பாரத தேசத்தை உலக அரங்குக்கு இட்டுச் செல்வதுதான் பாரதிய ஜனதாவின் கொள்கை.
பாரதிய ஜனதா கெட்டி தட்டிப் போய்விட்ட இயக்கம் அல்ல. மாறாக இந்த மண்ணில் வேர்விட்டு வளர்ந்திருக்கும் ஆல விருக்ஷம்.

No comments: